கடலின் நீர்மட்டம் தாழ்ந்ததால் படகு போக்குவரத்து தாமதமாக தொடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு குறிப்பாக விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதேபோன்று இன்று விடுமுறை தினம் என்பதால் கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இவர்கள் காலையில் வரும் சூரிய உதயத்தை பார்த்து மகிழ்ந்து விட்டு பல இடங்களை சுற்றிப் பார்ப்பர்.
அதன் பிறகு கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகில் சென்று மகிழ்வர். இந்நிலையில் நேற்று முன்தினம் கடலின் நீர்மட்டம் திடீரென தாழ்ந்ததால் படகு போக்குவரத்து ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனையடுத்து நேற்றும் நீர்மட்டம் தாழ்ந்ததால் படகு போக்குவரத்து 2 மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று மகிழ்ந்தனர்.