இருசக்கர வாகன விபத்தில் மீன் வியாபாரி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குளச்சல் அருகே கோடிமுனை பகுதியில் ஜான் ஜினோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கின்றனர். இவர் இருசக்கர வாகனத்தில் கோடிமுனையில் இருந்து குளச்சல் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் ஜான் ஜினோ கல்லறைத் தோட்டம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒரு நாய் குறுக்கே சென்றது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜான் ஜினோ திடீரென பிரேக் பிடித்துள்ளார். அப்போது நிலைத் தடுமாறி இருசக்கர வாகனம் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஜான் ஜினோவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரம் பகுதியில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஜான் ஜினோ பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.