தாயின் கண் முன்னே மகன் ஊருணியில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை அடுத்துள்ள ஏர்வாடி பகுதியில் முகமது முகைதீன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 8 வயதில் முகமது நூர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முகமது நூர், தனது தாயாருடன் குளிப்பதற்காக அப்பகுதியில் உள்ள ஊருணிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிறுவனின் தாயார் துணி துவைத்து கொண்டிருக்கும் போது ஊருணியில் குளித்துக் கொண்டிருந்த சிறுவன் திடீரென தண்ணீருக்குள் மூழ்கினார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவனின் தாயார் உடனடியாக அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் உடனடியாக ஊருணியில் மூழ்கிய முகமது நூரை மீட்டு கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.