Categories
சினிமா தமிழ் சினிமா

தாக்குதல் நடத்தியதாக பொய் சொன்னாரா விஜய்சேதுபதி? கிரிமினல் அவதூறு வழக்கு….!!!!

நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடிகர் மகா காந்தி மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ் திரையில் நடிகராக இருந்து வரும் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த மகா காந்தி என்பவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவ பரிசோதனைக்காக மைசூர் செல்வதற்காக நவம்பர் 2-ஆம் தேதி இரவு, விமானம் மூலம் பெங்களூர் விமான நிலையம் சென்றதாகவும், அங்கு நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக தாம் சந்தித்ததாகவும், திரைத்துறையில் அவரின் சாதனைகளைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் தனது வாழ்த்துக்களை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, பொதுவெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தன் ஜாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் குறிப்பிட்டுள்ளார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய தன் மீது அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், தனது காதில் அரைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

உண்மை சம்பவங்கள் இவ்வாறு இருக்க, மறுநாள் ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய்சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.எனவே திரைத்துறையில் இருக்கின்ற சக நடிகரை பாராட்ட சென்ற தன்னை தாக்கி அதை உண்மைக்குப் புறம்பாக செய்தி ஆக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.சென்னை சைதாப்பேட்டை 9-ஆவது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.

Categories

Tech |