சினிமா சண்டைக்கலைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் சண்டை கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அரவிந்தன் அதே பகுதியில் வசிக்கும் ரீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த அரவிந்தன் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து நேற்று காலை மது குடித்துவிட்டு தூங்க போவதாக கூறி படுக்கையறைக்கு சென்ற அரவிந்தன் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜன்னல் வழியாக பார்த்த போது அரவிந்தன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அரவிந்தனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அரவிந்தன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.