2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதையடுத்து நடப்பு ஆண்டிற்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் மார்ச் 19 தாக்கல் செய்தார். இதில் விவசாயிகளுக்கான பல்வேறு முக்கிய அம்சங்கள் இடப்பெற்றன. அதனை தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மார்ச் 21 முதல் 3 நாட்கள் நடைபெற்றது.
இந்நிலையில் தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல, வளர்ந்த மாநிலம் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பேசிய அவர், “பீகார் உத்தரப்பிரதேசத்தோடு தமிழ்நாட்டை ஒப்பிட்டு சிறப்பாக இருக்கிறோம் எனக் கூறுவது போதாது. தென்கிழக்கு ஆசிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்கும் அடிப்படையில் இருக்க வேண்டும். இங்கு 75 சதவீதத்திற்கும் அதிகமானோர் சொந்த வீடுகளில் வசிக்கின்றனர். 66 சதவீதம் பேர் டூவீலர் வைத்துள்ளனர்” என்று கூறினார்.