தமிழக முதலமைச்சரின் தாயார் மறைவுக்கு, அவரை நேரில் சந்தித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் கடந்த 12ஆம் தேதி உயிரிழந்தார். அதனால் முதலமைச்சர் திட்டமிட்டு இருந்த அனைத்து சுற்றுப் பயணங்களை ரத்து செய்துவிட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையதிற்கு உடனடியாக புறப்பட்டு சென்றார். அதன்பிறகு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு, தொடர்ந்து காரிய நிகழ்வுகளில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அனைத்தையும் முடித்துவிட்டு நேற்று மாலை 6 மணிக்கு சிலுவம்பாளையதிலிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இரவு 9 மணி அளவில் அவர் சென்னையை சென்றடைந்தார்.
இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் பழனிசாமி இல்லத்திற்கு நேரில் சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித், அவரின் தாயார் மறைவிற்கு ஆறுதல் கூறினார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் உருவப்படத்திற்கு ஆளுநர் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.