தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களைத் தேடிச் சென்று ஆங்காங்கே தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது வரை 9 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மக்கள் அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். ஒவ்வொரு முகாமிலும் அரசு நிர்ணயித்த இலக்கை விட அதிக அளவு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று 10வது மெகா தடுப்பூசி முகாம் 50 ஆயிரம் இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 2,000 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு கோடிக்கு மேல் தடுப்பூசி கையில் இருப்பதால் முதல் தவணை, இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. பொதுமக்களின் வசதிக்காக அவர்களின் வீடுகளுக்கு அருகிலேயே வாரத்தில் இரண்டு நாட்கள் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. எனவே பொதுமக்கள் தயக்கம் கொள்ளாமல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.