தமிழகத்தில் இன்று 19,112 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இருந்தாலும், குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இருக்கின்றது. தமிழக அரசும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு, உயிரிழப்புகளை குறைத்து, அதிகமானோரை குணப்படுத்த முனைப்பு காட்டி வருகிறது. அதன் பலனாக நாளுக்கு நாள் அதிகமானோர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டது. அதில், இன்று தமிழகத்தில் இன்று மட்டும் 1,34,141 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பரிசோதனை 2,28,30,992 ஆக இருக்கின்றது. இன்று புதிதாக 21,228 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,49,292 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 144 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,612 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று 19,112பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,09,450 ஆக உயர்ந்துள்ளது. இந்த செய்தி மக்களுக்கு ஆறுதல் அளிக்கிறது. தற்போது தமிழகத்தில் 1,25,230 பேர்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.