தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 14ம் தேதி 2020-21ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 10-வது முறையாக தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதிகள் மற்றும் புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. பின்னர் 17ம் தேதி காலை 10 மணிக்கு மீண்டும் சட்டசபை கூடும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதன் பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது. அதன்படி பிப்ரவரி 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டத்தொடர் நடைபெற்றது.
கடைசி நாள் கூட்டத்தில் வேளாண் மண்டல மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார் சபாநாயகர் தனபால். இந்த நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் தொடங்கியது. இதில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை ஏப்ரல் 9ம் தேதி வரை நடத்த முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.