Categories
மாநில செய்திகள்

தமிழக அரசின் ஊரடங்கு கட்டுப்பாடுகள்…. சிரமத்துக்கு ஆளாகும் எல்லையோர மக்கள்…. பெரும் வேதனை….!!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் அக்டோபர் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின் படி,தீவிர நோய் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கேரள மாநிலத்தில் பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கிருந்து வரும் மக்களுக்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது கேரள எல்லையில் அமைந்துள்ள வெட்டிவிட்டகாடு காலனியில் வசித்து வரும் மக்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்த கிராமம் கேரளாவில் அமைந்திருந்தாலும், தங்களின் அனைத்து தேவைகளுக்கும் தமிழக எல்லைக்குள் வர வேண்டிய அவசியம் உள்ளது.

இத்தனை ஆண்டுகளாக அவர்கள் இவ்வாறு வாழ்ந்து வருகின்றனர். சாதாரண மளிகை பொருட்கள் வாங்குவதற்கு கூட தமிழக செக் போஸ்டை கடந்து உள்ளே வர வேண்டும். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக போலீசார் அனுமதிக்க மறுப்பதாக அந்த கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அந்தக் காலனி அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது. அங்கு 20 ஆண்கள், 18 பெண்கள் மற்றும் அவர்களது 13 குழந்தைகள் வசித்து வருகின்றனர்.

அவர்கள் முத்துவன் சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் கிராமத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில்தான் ரேஷன் கடை உள்ளது. அங்கு 40 கிலோ மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு தலையில் சுமந்து கொண்டுதான் கிராமத்திற்கு நடந்து செல்ல வேண்டும். மருத்துவ வசதிகள் பெறுவதற்கு வால்பாறைக்கு வரவேண்டும் என்று கிராம மக்கள் கூறுகின்றனர். அவசர மருத்துவ தேவை என்றால் கூட ஆம்புலன்ஸ் சாலக்குடியில் இருந்து வரவேண்டும்.

ஆனால் மலைப்பகுதிகளை சுற்றி நூறு கிலோமீட்டர் தூரத்தை கடந்து வர வேண்டி இருப்பதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தற்போது மலக்கப்பர ஸ்டேஷனில் ஒரு ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் தங்களின் கிராமத் திற்கு சாலை வசதி செய்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் மின்சார வசதி, மொபைல் நெட்வொர்க் வசதிகள் எதுவும் இல்லை. அதனால் தகவல் தொடர்பு மற்றும் பிள்ளைகளின் கல்வி ஆகியவை கேள்விக்குறியாக இருப்பதாக மக்கள் பெரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |