தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறப்பாக செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் அவ்வபோது செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மேல்படிப்பை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கல்லூரிகள் திறக்கப்பட உடனே முதலாமாண்டு மாணவர்களுக்கான உதவித்தொகை ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார். 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் தமிழ் வழியில் படித்த மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐஐடியில் சேர்ந்து படிக்கும் போது அவர்களுக்கு இந்த ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.