தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருவதால், கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. ஆனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த கொரோனா பாதிப்பு, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதுமட்டுமல்லாமல் கொரோனா பலி எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவக் குழுவுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழகத்தில் முழு ஊரடங்கை மேலும் ஒரு வாரம்,அதாவது மே 31-ஆம் தேதி வரை நீட்டித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பால் வினியோகம், குடிநீர் வினியோகம், தினசரி பத்திரிக்கை விநியோகத்திற்கு மட்டும் அனுமதி. காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.
தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும். உரிய மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவுடன் அனுமதி. செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கலாம். பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும். ஏடிஎம் மற்றும் அவற்றிற்கான சேவைகள் அனுமதிக்கப்படும். இன்று இரவு 9 மணி வரையும் நாளை ஒரு நாள் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு அவசியம் இல்லை. இன்றும் நாளையும் தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதி.