தமிழகம் முழுவதும் குடிநீர் பந்தல்கள் அமைக்க ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பொது மக்களின் தாகத்தை தணிக்க தொண்டர்கள் ஆங்காங்கே குடிநீர் பந்தல்கள் மற்றும் நீர் மோர் பந்தல்களை அமைக்க வேண்டும் என்று ஈபிஎஸ் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொரோனா தாக்கம் அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், முக கவசம் மற்றும் சனிடைசர் வழங்கவும் வலியுறுத்தியுள்ளனர்.