வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று முன்தினம் புயலாக மாறியது. இந்த மாண்டஸ் புயல் சென்னையை நோக்கி 60 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் நேற்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்திறந்தது. அதன்படி மாமல்லபுரம் அருகே இன்று அதிகாலை புயல் கரையை கடந்தது. இன்று அதிகாலை சுமார் 1.50 மணியளவில் புயல் மாமல்லபுரத்திற்கு மிகவும் அருகே உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கரையைக் கடக்கும் நிகழ்வு தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் இது நிறைவடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் மற்றும் மழையால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அனைத்து அலுவலர்களும் தலைமை இடத்தில் இருக்க வேண்டும். பலத்த காற்று காரணமாக விழுந்த மரங்களை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.