சுயநிதி பிரிவில் 2018-ம் ஆண்டு வரை மற்றும் சாதாரண பிரிவில் 2013 வரை நிலுவையில் உள்ள விண்ணப்பங்களுக்கு விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்வாரியமானது சாதாரண மற்றும் சுயநிதி போன்ற 2 பிரிவுகளில் விவசாய மின் இணைப்புகளை வழங்குகிறது. இதில் சாதாரண பிரிவில் மின்சாரம், மின்வழித் தடங்கள் அமைக்க தேவையான கம்பம், வயர் போன்றவை இலவசமாக வழங்கப்படும்.
மேலும் சுயநிதி பிரிவில் மின்சாரம் மட்டும் இலவசமாக கொடுக்கப்படும் நிலையில் மின்வழித்தட செலவுக்கான கட்டணத்தை விவசாயிகள் செலுத்த வேண்டும். இதனால் விவசாயிகளிடம் இருந்து 10 ஆயிரம் ரூ, 25 ஆயிரம் ரூ, 50 ஆயிரம் ரூ என்று 3 வகை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் இந்த கட்டணத்தை விடவும் மின்வழித் தடம் அமைப்பதற்கு அதிகம் செலவாகிறது. இதனால் சுயநிதி பிரிவில் தத்கால் எனும் விரைவு திட்டத்தின் கீழ் மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
இதற்கு மோட்டார் பம்ப் திறனுக்கு ஏற்றவாறு ரூ.2.50 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. கடந்த மார்ச் மாதத்தின் நிலவரப்படி விவசாய மின் இணைப்பு வேண்டி 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் கடந்த செப்டம்பரில் தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் சாதாரண பிரிவில் 40 ஆயிரம் சுயநிதி பிரிவில் 60 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட இருக்கிறது.
இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதாரண பிரிவில் 2007-ம் ஆண்டு வரையும், சுயநிதி பிரிவில் 2013-ம் ஆண்டு வரையும் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களில் பதிவு மூப்பு அடிப்படையில் மின் இணைப்பு வழங்க உத்தரவிடப்பட்டது. அதேசமயம் தத்கால் திட்டத்தில் பதிவு மூப்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் முழு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
இந்நிலையில் விண்ணப்பித்தவர்களின் மறைவு ஆகிய காரணங்களால் பல பேருக்கு மின் இணைப்பு வழங்கப்படாமல் இருக்கிறது. அவர்களுக்கு பதில் மற்றவர்களுக்கு மின் இணைப்பு வழங்கும் அடைப்படையில் கூடுதல் சலுகையாக, சாதாரண பிரிவில் 2007-ம் வருடத்துக்கு பதிலாக 2013-ம் ஆண்டு வரையும், சுயநிதி பிரிவில் 2013-ம் வருடத்துக்கு பதிலாக 2018-ம் ஆண்டு வரையும் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களுக்கு மின் இணைப்பு வழங்க பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.