தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. முதலில் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் நடத்தப்பட்டு வந்த தடுப்பூசி முகாம், அதன்பிறகு சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி போடும் பணியை மேலும் அதிகப்படுத்தும் வகையில் வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாரத்திற்கு இரண்டு முறை மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.
தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வருவதால் தடுப்பூசி போட பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில் மெகா தடுப்பூசி முகாம்கள் மீண்டும் சனிக்கிழமைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 50 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம்கள் வருகின்ற 4ஆம் தேதி நடைபெற உள்ளது. சனிக்கிழமைகளில் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டால் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை எடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்ற அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.