Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 700 சிறை கைதிகள் விடுதலை…. அரசின் நடவடிக்கையால் புதிய சர்ச்சை….!!!!

தமிழகத்தில் சட்டமன்ற கூட்டத்தொடரில் காவல் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், சிறையில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளின் நலனை கருதி செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.

இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி தமிழக அரசின் உள்துறை சார்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 488ல், வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலைக்கான நிபந்தனைகளில் வகுப்புவாத மற்றும் மத மோதல்களில் ஈடுபட்டு கைதானவர்கள் முன் விடுதலை பெற இயலாது என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு கடந்த காலங்களில் வாழ்நாள் சிறை வாசம் அனுபவித்து முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை ஆவார்கள் என்ற நம்பிக்கையை தகர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசியல் கட்சிகளிடம் சலசலப்பையும் ஏற்படுத்தியது. இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அரசாணையில் குறிப்பிடப்பட்ட நிபந்தனைகளின்படி 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறை வாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் விடுதலை பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. நீண்ட காலமாக வாழ்நாள் சிறை வாசம் அனுபவித்து வரும் முஸ்லிம் சிறைவாசிகள் யாரும் பயங்கரவாத தடை சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்படவில்லை.

எனவே முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன் மற்றும் நளினி 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை விடுதலை செய்வதில் மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்ட நிலையிலும் பல்வேறு சிக்கல்கள் தொடர்கின்றன. இந்த விஷயத்தில் பதவியேற்ற இத்தனை நாட்களாகியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முஸ்லிம் கைதிகளை விடுதலை செய்ய இயலாத வகையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கை புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 700 கைதிகள் விடுதலை தொடர்பாக தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |