தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று ஆறு மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், தென்மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மத்திய வங்கக் கடல்அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரளா -லட்சத்தீவு கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல், குமரி கடல் மற்றும் மன்னார் வளைகுடா ஆகிய பகுதிகளில் அதிக அளவு காற்று வீசும் என்பதால் மீனவர்கள் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.