தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1374 மாநகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,838 பதவியிடங்களுக்கு வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய நிலையில், பிப்ரவரி 4ஆம் தேதி முடிவடைந்தது.
இதனிடையில் மாநகராட்சிகளின் 1,374 பதவிகளுக்கு போட்டியிட 14,701 வேட்புமனுக்களும், நகராட்சியிலுள்ள 3,843 இடங்களுக்கு 23,354 வேட்புமனுக்களும், போரூராட்சிகளில் உள்ள 7,621 இடங்களுக்கு 36,361 வேட்புமனுக்கள் என்று மொத்தம் 74,416 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. தற்போது தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் 3 தினங்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன்னதாக பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள பகுதிகளில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிலுள்ள டாஸ்மாக் கடைகளில் மது விற்க மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அந்த தடையை மீறி மது விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது..