தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் கடந்த ஆண்டு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன்பிறகு மாணவர்களின் நலனைக் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சில வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் திறப்பு குறித்த எந்த ஒரு அறிவிப்பும் தற்போது வரை வெளியாகவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் இரண்டாவது வாரத்திற்கு பிறகு பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கிவிட்டதாகவும், பள்ளிகளில் மாணவர்கள் டிஜிட்டல் வகையில் பாடம் கற்க ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கபட்டுள்ளதாகவும், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்கலாமா என அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.