தமிழக முழுவதும் இன்ப்ளூயன்ஸா எனப்படும் ப்ளூ காச்சல் பரவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் பெரியவர்களை விட குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கிறது. அதன்படி சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் காச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்ப்ளூயன்ஸா காய்ச்சல் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து சுகாதாரத்துறை மாவட்ட அதிகாரிகளுக்கும் எழுதியுள்ள கடிதம் அனுப்பி உள்ளார். அதில், திடீர் வறட்டு இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, உடல் வலி, உடல் சோர்வு ஆகியவை இன்ப்ளூயன்ஸ் காய்ச்சலின் அறிகுறிகளாகும். மேற்கண்ட அறிகுறிகளுடன் பொதுமக்கள் வந்தால் மருத்துவமனையில் காய்ச்சலுக்கான சிகிச்சை வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். லேசான அறிகுறிகள் கொண்டவர்கள் 48 மணி நேரத்துக்கு மருத்துவ கண்காணிப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். அதனைத் தொடர்ந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், 5அல்லது 5 வயதுக்கு மேற்பட்ட பச்சிளம் குழந்தைகள், தீவிரமான சுவாச பிரச்சனை கொண்டவர்கள், நீரழிவு மற்றும் உடல் பருமன் கொண்டவர்கள் என எளிதில் நோய் தொற்றுக்கு ஆளாக கூடிய நபர்களுக்கு அறிகுறிகள் கண்டறிந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும். மேலும் ஆசெல்டமிவிர் மற்றும் தேவைப்படும் மருந்துகளை வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.