தமிழகத்தில் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேசமயம் கடந்த வாரம் புயல் காரணமாகவும் பல்வேறு மாவட்டங்களிலும் இடைவிடாது கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து தெற்கு வங்க கடலில் கிளவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நாளை மற்றும் நாளை மறுநாளும் கனமழை பெய்யும்.
வங்க கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையிலிருந்து 510 கிலோமீட்டர் தொலைவிலும் சென்னையிலிருந்து 530 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டு உள்ளது. கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 16 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதன் காரணமாக நாளை 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் குமரி, நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது.