Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு!…. கடுப்பாகும் அமைச்சர்கள்…. சிரமப்படும் மக்கள்….!!!!!

தி.மு.க அரசு மற்றும் மின்வெட்டுக்கும் நெருங்கிய பந்தம் இருக்கிறது. கடந்த 2006 -2011 தி.மு.க ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு மக்கள் மத்தியில் மிகப் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. அப்போதைய மின் துறை அமைச்சர் ஆற்காடு வீரசாமியே ஒருவேளை தேர்தலில் திமுக தோற்றுப் போனால் அதற்கு மின்வெட்டுதான் காரணமாய் இருக்கும் என தெரிவிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாய் இருந்தது. அத்தகைய வரலாறு கொண்ட தி.மு.க-வில் 10 வருடங்களுக்கு பின் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றபோதும் மின்வெட்டு நின்றபாடில்லை.

மின் தடை ஏற்பட தொடங்கியதும் திமுக-னா மின் வெட்டு, மின்வெட்டுனா தி.மு.க என மக்கள் வசைபாட துவங்கினர். இந்நிலையில் மின்வெட்டுக்கு காரணம் அணில்கள்தான் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியவுடன், “யாரு சாமி இவரு அண்ணன் செல்லூர் ராஜூக்கே டப் பைட் கொடுக்கிறார் என நெட்டிசன்கள் பொளந்து எடுத்தனர். இவ்வாறு அமைச்சரின் பதில் அ.தி.மு.க, பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகளுக்கும் நல்லவொரு தீனியாய் அமைந்து அவர்களும் தங்களது பங்குக்கு இஷ்டம்போல் பேசினர்.

நிலக்கரி பற்றாக்குறை துவங்கி என்னதான் காரணம் கூறப்பட்டாலும், மின்வெட்டை கிரகித்துக்கொள்ளும் நிலையில் மக்கள் இல்லை என்பது தான் எதார்த்தம். மக்கள் அதிருப்தி ஒரு புறம் இருக்க அண்மை காலமாக அமைச்சர்களையும் சீண்டிப்பார்க்கிறது. சென்ற சில நாட்களுக்கு முன் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் பங்கேற்ற நிகழ்ச்சியில், மின்வெட்டு ஏற்பட்டது. அப்போது அம்மாவட்ட ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பினரும் மின்சார வாரியத்திற்கு தொடர்பு கொண்டு பேசியும் நீண்டநேரமாக மின்சாரம் வராததால், அமைச்சர் கடுப்பாகி நிகழ்ச்சியை சீக்கிரம் முடித்துக்கொண்டு வெளியேறினார்.

அமைச்சரின் கோபம் 2 உதவி பொறியாளர்களுக்கு கேட்காமலேயே பணியிடை மாற்றம் பெற்றுத்தந்தது. இதற்கிடையில் செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன், சென்னை, தியாகராய நகரிலுள்ள காமராஜ் நினைவு இல்லத்தினை ஆய்வு மேற்கொள்ள சென்றபோதும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் போன் டார்ச்சை அடிக்க ஒரு வழியாக அமைச்சர் சாமளித்துவிட்டு கிளம்பியுள்ளார். இவ்வாறு அமைச்சர்களின் நிகழ்ச்சிகளின் போதும், மின் வெட்டு ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.

Categories

Tech |