நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த உண்மை நிலவரம் உறைய வைக்கிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியிலேயே ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். இதனால் கொரோனாவால் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகத்திலும் கொரோனா அதிகரித்து வருவதால் இரவு ஊரடங்கு, ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பல புதிய கட்டுப்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்று முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றது.
1.அனைத்து அரசு அலுவலகங்களும், தனியார் அலுவலகங்களும், அதிகபட்சம் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
2.அரசு ஊழியர்கள் 50 சதவீதம் பேர் மட்டுமே பணிக்கு வர உத்தரவு. குரூப்-ஏ பிரிவில் உள்ள அரசு அதிகாரிகள் மட்டும் அனைத்து நாட்களும் பணிக்கு வர வேண்டும். மற்ற அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும்.
3.அரசு, தனியார் பேருந்துகள், பயணியர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள், வாடகை டாக்ஸி ஆகியவற்றில் 50 சதவீத இருக்கைகளில் மட்டும் பொது மக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி
4.வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லை. 3000 சதுர அடி மேல் உள்ள கடைகளை அடைக்க வேண்டும்.
5.மளிகை, பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதி. ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.
6.மேற்கூறிய மளிகை, பலசரக்கு மற்றும் காய்கறிக் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை.
7.சனிக்கிழமைகளில், மீன் மார்க்கெட், மீன் கடைகள், கோழி இறைச்சி கடைகள் மற்ற இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி இல்லை. இதர நாட்களில் காலை 6.00 மணி முதல் 12.00 வரை செயல்பட அனுமதி
8.சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு பயணம் செய்ய அனுமதி இல்லை. அரசால் அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளில் இருப்பவர்கள் தங்களது அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்
9.டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை செயல்படும் அனுமதி
10. அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை வழங்க மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி. உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை
11.மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசியப் பணிகள் வழக்கம் போல எந்தத் தடையுமின்றி செயல்பட அனுமதி
12.இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை
13.அழகு நிலையங்கள், சலூன் கடைகள் இயங்க அனுமதி இல்லை
14.பெட்ரோல் மற்றும் டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதி
15.தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசியப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இரவு நேர ஊரடங்கின்போதும், ஞாயிற்றுக்கிழமை இரவு ஊரடங்கின் போதும் அனுமதி
16.அவசர மருத்துவத் தேவைகளுக்கும், விமானநிலையம், ரயில்நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம். மருத்துவத்துறை சார்ந்த பணிகள், சரக்கு வாகனங்கள் உள்ளிட்டவைகள் இரவு நேர ஊரடங்கின்போதும், ஞாயிற்றுக்கிழமை இரவு ஊரடங்கின் போதும் அனுமதி