தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
அதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி மாநிலம் முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் பரிசோதனை எண்ணிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 23 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. அதனால் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்றுமுதல் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி புதிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு:-
◆ ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும்.
◆ நண்பகல் 12 மணிவரை மட்டுமே தேநீர் கடைகள் செயல்பட அனுமதி.
◆ அரசு அலுவலகங்கள், தனியார் அலுவலகங்களில் 50 சதவீதம் ஊழியர்களுடன் செயல்பட அனுமதி.
◆ மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் செயல்படலாம்.
◆ காய்கறி, பலசரக்கு, பழ கடைகள் குளிர்சாதன வசதியின்றி பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும்.
◆ காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும்.
◆ ஊரகம் மற்றும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் சலூன், ஸ்பா உள்ளிட்ட அழகு நிலையங்கள் செயல்பட அனுமதி இல்லை.
◆ இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட் சனி, ஞாயிறு கிழமைகளில் திறக்க அனுமதியில்லை.
◆ ரயில், மெட்ரோ, தனியார் , அரசு பேருந்துகளில் 50 சதவீதம் இருக்கைகளில் மட்டுமே பயணிகளுக்கு அனுமதி. சென்னை புறநகர் ரெயில்களில் பொதுமக்களுக்கு அனுமதியில்லை. அத்தியவசய பணியிலிருப்பவர்களுக்கு மட்டுமே அனுமதி.
◆ மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு வரவேண்டிய கட்டாயமில்லை!
◆ ஐடி நிறுவனங்களில் இரவுப்பணி மேற்கொள்ள அனுமதி.
◆ உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே வழங்க அனுமதி.
◆ பெட்ரோல், டீசல் பங்குகள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.
◆ திருமண நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்கலாம். இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 20 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி.
◆ சமுதாயம், அரசியல், கல்வி மற்றும் பொழுதுபோக்கு, இதர விழாக்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தடை.
◆ திறந்த வெளி மற்றும் உள் அரங்கங்களில் விழாக்கள் நடத்தவும் அனுமதி இல்லை.