Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி… சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு பண்ணுங்க… சீமான் வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு சார்பாக அணிவகுப்பு நடத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் அக்டோபர் 2ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பாக தமிழகத்தில் அணி வகுப்பு நடத்தப்பட இருக்கிறது. அணி வகுப்பு நடத்துவதற்கான நிபந்தனைகள் பற்றி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். உயர்நீதிமன்றத்தில் இத்தீர்ப்புக்கு தமிழகத்தில் பலரது மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. மேலும் ஆளுங்கட்சியான திமுக-வையும் பலர் சமூகவலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று சீமான் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தமிழகத்தில் பேரணி நடத்துவதற்கு அனுமதி வழங்கி இருக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. காந்தி ஜெயந்தி அன்று அவரது படுகொலைக்காகத் தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். என்ற மதவாத இயக்கத்தின் பேரணிக்கு மாநிலத்தின் 50 இடங்களில் அனுமதி வழங்கியிருப்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல.

மதப்பூசல்களை அனுமதியாது எப்போது அமைதிப் பூங்காவாகத் விளங்கும் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கும் முடிவானது மிகத் தவறான முன் உதாரணமாகும். மக்கள் நலன் என்பது துளியுமற்று, மதவாத அரசியலையும் பிரித்தாளும் சூழ்ச்சியையும் கையிலெடுத்து, நாட்டைத் துண்டாடி, அதன் வாயிலாக அரசியல் இலாபமீட்டத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணியை தமிழக மண்ணில் அனுமதிப்பது என்பது மத நல்லிணக்கத்துக்கும், சமூக அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் பேராபத்தாகும். எனவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி வழங்கி இருக்கும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |