தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன.
தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத் தேர்வு மே 3ஆம் தேதி தொடங்கி 21ஆம் தேதி முடிவடையும் என பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இதனையடுத்து 9 முதல் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட ஆல்பாஸ் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், தேர்தல் தேதி நெருங்கி கொண்டு இருப்பதாலும் மார்ச் 22ஆம் தேதி முதல் பிளஸ்-2 தவிர மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் பருவத் தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலுக்காக வாக்கு சாவடிகளை தயார் செய்ய உள்ளதால் ஏப்ரல் 1 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.