தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் அமலாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. அதற்கு அடுத்ததாக கோவை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொற்று பரவி வருகிறது இதையடுத்து பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும், இதை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் பல மாதங்களுக்குப் பிறகு தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் 50 சதவீதம் பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் சென்னைக்கு பல்வேறு இடங்களில் இருந்து அத்தியாவசிய தேவைக்கு பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில் நோய் பரவல் வேகம் எடுத்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவது குறித்தும், தடுப்பு பணிகள் குறித்தும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. முதலில் நோய் பரவல் அதிகம் உள்ள சென்னை போன்ற மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை கொஞ்சம் கொஞ்சமாக அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. மேலும் தனியார் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு மையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அறிவிப்பு வரும் நாட்களில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.