நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு மக்கள் தேவையின்றி வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளும் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்களில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மாநகராட்சியிடம் அனுமதி பெற வேண்டும் என்ற அவசியமில்லை மாநகராட்சி அலுவலக அதிகாரிகள் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்று தெரிவித்துள்ளார்.