தீ விபத்து ஏற்பட்டதால் கல்லூரி மாணவி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள பூவம்பாடி பகுதியில் தமிழ்ச்செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் திருச்செங்கோடு பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 12-ஆம் தேதி தமிழ்ச்செல்வனுக்கு டீ போடுவதற்காக அபிநயா வீட்டிலிருந்த பிறகு அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அபிநயா மீது மண்ணெண்ணெய் கேன் தவறி விழுந்ததால் மாணவி மீது தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இதனை அடுத்து அபிநயாவின் சத்தம் கேட்டு விரைந்து சென்று அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.