சென்னை கோட்டூர்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்த சசிகலா அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் கூறினார். கடந்த சில தினங்களாக பெய்து வந்த கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகின்றது. வீடுகளிலும் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழையால் அதிகமான இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஓ பன்னீர்செல்வம் மற்ற கட்சியை சேர்ந்த அரசியல் தலைவர்கள் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த சசிகலா அங்குள்ள மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். தத்தளிக்கும் மக்களை காப்பாற்ற மத்திய அரசு நிதி கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்க வேண்டும். மீண்டும் இது போன்று நடக்காதவாறு அரசு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் சசிகலா வலியுறுத்தியுள்ளார்.