நாட்டறம்பள்ளி அருகே 50 அடி ஆழம் உள்ள கிணற்றில் கரடி தவறி விழுந்த நிலையில், அதனை மீட்க தீயணைப்பு வீரர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகில் வெலக்கல்நத்தம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட செட்டேரிடேம் அருகில் வீரனூரை சேர்ந்தவர் 35 வயதான சண்முகம். நேற்று முன்தினம் இரவு காப்புக் காட்டில் இருந்து தண்ணீர் குடிக்க வந்த இரண்டு வயதுள்ள கரடி ஒன்று சண்முகத்திற்கு சொந்தமான 50 அடி ஆழம் உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை சண்முகம் விவசாய நிலத்திற்கு வந்தபோது கிணற்றின் உள்ளே தண்ணீரில் கரடி தத்தளித்துக் கொண்டிருந்தது. இதைப்பார்த்த சண்முகம் திருப்பத்தூர் வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வன காவலர் திருநாவுக்கரசு நாட்டறம்பள்ளி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இத்தகவலின் பேரில் நாட்டறம்பள்ளி தீயணைப்பு நிலைய அலுவலர் கலைமணி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கரடியை மீட்க நடவடிக்கை எடுத்து வந்துள்ளனர். கரடி கோபத்தில் இருப்பதால் கயிறு மூலம் மீட்க முடியாது. எனவே கரடி தானாகவே மேலே வருகின்ற வகையில் 40 அடி உயரம் கொண்ட ஒரு ஏணியும், 20 அடி உயரம் கொண்ட மற்றொரு அணியும் கிணற்றின் உள்ளே இறக்கினார்கள். அதன்பின் கரடி பகல் நேரம் மேலே வருவதற்கு வாய்ப்பு குறைவு. அதனால் இரவு வரை வனத்துறையினர் காத்திருந்தார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.