முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வலியுறுத்தி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டி விலக்கு, கல்லூரி நகர் ஆகிய பகுதிகளில் கடந்த சில வாரங்களாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படுவதில்லை. இது குறித்து அப்பகுதியினர் உத்தமபாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து சரிவர குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உடனடியாக குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் அம்மாபட்டி உத்தமபாளையம் சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று உறுதியளித்த பின்னரே சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.