நாகையில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். அவருக்கு 30 வயது இருக்கும். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாகை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருவாரூரிலிருந்து காரைக்காலுக்கு செல்லும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப் பதிந்து இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?ரயிலில் மோதி இறந்தாரா? அல்லது ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் அலசி விசாரணை நடத்தி வருகிறார்கள்.