Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை…. 100க்கு மேல் வழக்குகள்…. காவல்துறையின் அதிரடி வேட்டை….!!

ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9 நாட்களில் புகையிலை, கஞ்சா விற்பனை செய்த  120 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் தமிழகம் முழுவதும் புகையிலை, கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து வருகின்றனர். குறிப்பாக கல்லூரிகள் பள்ளிக்கூடங்களில் மறைமுகமாக விற்பனை செய்பவர்களை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

ஈரோடு மாவட்டத்தில் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் உத்தரவிட்டுள்ளார். அவரின் உத்தரவின்படி போலீசார் தீவிர ரோந்து, ரகசிய படை மூலம் போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு சென்று கைது செய்தும் மோப்ப நாய்கள் மூலம் சோதனை செய்தும் வருகின்றனர்.

இதையடுத்து போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியுள்ளதாவது, “ஈரோடு மாவட்டத்தில் கடந்த 28-ந் தேதி முதல் 5-ந் தேதி (நேற்று முன்தினம்) வரை 9 நாட்களில் அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது 102 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.  62 கஞ்சா வழக்குகளில் 76 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து மொத்தம் 25 கிலோ 550 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

40 புகையிலை வழக்குகளில் 45 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 135 கிலோ 275 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மது விற்பனை செய்யப்பட்டதாக 102 வழக்குகள், லாட்டரி சீட்டு விற்றதாக 6 வழக்குகள், பணம் வைத்து சூதாடியதாக 3 வழக்குகள் என மொத்தம் 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் மது விற்பனை செய்யப்பட்டதாக 102 பேரும், லாட்டரி சீட்டுகளை விற்றதாக 10 பேரும், சூதாட்டம் ஆடியதாக 13 பேரும் என மொத்தம் 125 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

அவர்களிடம் இருந்து 1,525 மது பாட்டில்கள், 32 லிட்டர் கள், 8 இருசக்கர வாகனங்கள், 46 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், ரூ.40 ஆயிரத்து 70 பறிமுதல் செய்யப்பட்டன.இந்த வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் அரசுடமை ஆக்கப்பட உள்ளன. மது, லாட்டரி சீட்டுகள், புகையிலை பொருட்கள் போன்றவற்றை விற்பனை செய்தல், பணம் வைத்து சூதாட்டம் நடத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்ட விரோத செயலில் ஈடுபடுபவர்கள் குறித்த புகார்களை 96552 20100 என்ற செல்போன் எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |