குஜராத்தின் கட்ச் மாவட்டம் கடற் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் இந்திய மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பாகிஸ்தான் மீனவர்கள் அவ்வப்போது அங்கே தடையை மீறி மீன்பிடித்து வருகின்றனர். இந்நிலையில் இரு நாட்டு எல்லை அருகேயுள்ள ஹரமி நலா பகுதியில் இந்திய எல்லை பாதுகாப்புபடையினர் நேற்று காலையில் ரோந்து சென்றுகொண்டிருந்தனர்.
அப்போது அங்கு பாகிஸ்தானை சேர்ந்த சில மீனவர்கள் படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இந்திய வீரர்களை பார்த்ததும் அவர்கள் 2 படகுகளை விட்டு விட்டு தங்களது கடற்பகுதிக்குள் தப்பி சென்றுவிட்டனர். அதனை தொடர்ந்து அந்த படகுகளை கைப்பற்றிய வீரர்கள், அதை சோதனையிட்டனர். எனினும் அவற்றில் சந்தேகத்துக்கிடமான பொருட்கள் எதுவுமில்லை. இருப்பினும் அவற்றை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.