கடந்த 2016 -ஆம் வருடம் ட்விட்டரில் வெறுக்கத்தக்க பேச்சு, குழந்தைகள் சித்திரவதை, மற்றும் தற்கொலை போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்காக நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழு என்னும் ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்ட சிவில் மனித உரிமைகள் மற்றும் பிற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த ஆலோசனை குழு துன்புறுத்தல், வெறுப்பு மற்றும் பிற தீங்குகளை ட்விட்டர் எவ்வாறு சிறப்பாக எதிர்த்து போராட முடியும் என்பதற்கான வழிகாட்டுதலையும், நிபுணத்துவத்தையும் வழங்கி வந்தது.
இந்நிலையில் ட்விட்டரை எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் வசப்படுத்தியுள்ளார். இதனையடுத்து எலான் மஸ்க் twitter நிர்வாகத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக தற்போது நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். நேற்று முன்தினம் இரவு இந்த குழு twitter பிரதிநிதிகளை சந்திக்க திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் இந்த கூட்டம் நடைபெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக குழு கலைக்கப்படுவதாக இ-மெயில் மூலமாக ட்விட்டர் அந்த குழுவிற்கு தெரிய ப்படுத்தியுள்ளது.
மேலும் பாதுகாப்பு குழுவிற்கு அனுப்பப்பட்ட இ-மெயில் ‘ட்விட்டரை பாதுகாப்பான தகவல் தரும் இடமாக மாற்றுவதற்கான எங்கள் பணி முன்பை விட வேகமாகவும், ஆக்ரோஷமாக நகரும் எனவும் இந்த இலக்கை எவ்வாறு அடைவது என்பது குறித்த உங்கள் யோசனைகளை நாங்கள் தொடர்ந்து வரவேற்போம்’ எனவும் கூறப்பட்டுள்ளது.