ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சமீபத்தில் ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ட்விட்டர் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டுமா? என ஒரு கேள்வியை கேட்டுள்ளார். மேலும் கருத்துக்கணிப்பு முடிவை கடைபிடிப்பதாக அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்ற தான் விரும்பவில்லை என கூறியுள்ளார். அந்த வேலைக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிப்பேன் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவரது செயல்பாடுகள் அனைத்தும் திருப்திகரமானதாக இல்லாத காரணத்தினால் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
அதிலும் குறிப்பாக அமெரிக்காவின் பல்வேறு செய்தி நிறுவனங்களை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் பலரின் ட்விட்டர் கணக்குகளை twitter நிறுவனம் முடக்கியது. ஐ.நாவின் உலகளாவிய தகவல் தொடர்புகளுக்கான துணை பொது செயலாளர் மெலிசா பிளவ்மிங், ட்விட்டரின் இது போன்ற செயல்பாடுகள் மன உளைச்சலை தருவதாக கூறியிருந்தார். மேலும் அவர், தனது டெஸ்லா மின்சார கார் நிறுவனத்தின் 2 கோடியே 20 லட்சம் பங்குகளை 3.58 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு கடந்த 3 நாட்களாக விற்றது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
எலான் மஸ்க் ட்விட்டரின் நம்பிக்கை மற்றும் பாதுகாப்பு குழுவை கலைத்து நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் தான் “எலான் மஸ்க் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்ற கருத்துக்கணிப்பை தற்போது தொடங்கியுள்ளார். அதற்கு 57.6 சதவீதத்திற்கும் அதிகமான பயணர்கள் ஆமாம் என்றும் 42.4 சதவீதம் பயணர்கள் இல்லை என்றும் கிளிக் செய்து” இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.