இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச்சு மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. ஆனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் ஒப்பிடும் போது இந்தியா அதிக அளவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது.
அதனால் அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் நாளுக்கு நாள் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில் ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பூசியை ஓரிடத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கான அனுமதியை தெலுங்கானா அரசுக்கு மத்திய விமானத்துறை வழங்கியுள்ளது. ஆனால் எந்த கொரோனா தடுப்பு ஊசிகள் முதலில் கொண்டு செல்லப்படும் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த சோதனை வெற்றி பெற்றால் இது ஒரு சிறப்பான திருப்புமுனையாக அமையுமென தெலுங்கானா அரசு தெரிவித்துள்ளது.