தப்லீகி ஜமாத் எனும் இஸ்லாமிய பிரசார அமைப்புக்கு சொந்தமான மர்கஸ் மசூதி ஒன்று டெல்லியின் நிஜாமுதீன் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு (மார்ச் 8,9,10 உள்ளிட்ட தேதிகளில்) மதக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், இந்த நிகழ்ச்சியில், மலேசியா, இந்தோனேசியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர், கிர்கிஸ்தான் மற்றும் சவுதி அரேபியா ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, ஜிபூட்டி, இலங்கை, பங்களாதேஷ், இங்கிலாந்து, பிஜி, பிரான்ஸ் மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலிருந்து 250க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், தமிழகத்தில் இருந்து 1,500 பேரும், கர்நாடகா, தெலங்கானா, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கலந்து கொண்டுள்ளனர். அதில், மதக்கூட்டத்தில் பங்கேற்ற வெளிநாட்டினர் தமிழ்நாடு, தெலங்கானா, பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் இந்த அமைப்பின் கிளைகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நிஜாமுதீன் பகுதியை சுற்றிவளைத்த போலீசார் அங்கிருந்த 300 பேரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சுமார் 1,200 பேரை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகிறது. அதில் 441 பேருக்கு நோய் அறிகுறி இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்களின் விவரங்கள் குறித்து அனைத்து மாநில அரசுகளும் சேகரித்து வருகிறது. அதன்படி,
தமிழ்நாடு: கூட்டத்தில் பங்கேற்றவர்கள் 1,500 பேர், அதில் 981 பேரின் விவரங்கள் சேகரிப்பு. பாதிப்பு எண்ணிக்கை 67 பேர். இந்த நிலையில், திருச்சியில் 88 பேர் மருத்துவமனையை அணுகியுள்ளனர்.
கேரளா: கூட்டத்தில் பங்கேற்றவர்கள் 22 பேர். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
உத்தரகண்ட்: மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் 26 பேர். இவர்கள் அனைவரும் டெல்லியில் இருப்பதாக கூறப்படுகிறது.
உத்தரபிரதேசம்: லக்னோவில் இருந்து 18 பேர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இவர்கள் சொந்த பகுதிக்கு இன்னும் திரும்பவில்லை. மேலும் வெளிநாட்டை சேர்ந்த 24 பேர் லக்னோ வந்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜம்மு – காஷ்மீர்: பூஞ்ச் மாவட்டத்தில் இருந்து 10 பேர் மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் இருந்து சுமார் 342 பேர் மதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதில் 200 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆந்திரா: ஆந்திராவில் இன்று கிடைத்த தகவலின் படி புதிதாக 43 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளது தெரியவந்துள்ளது.
தெலங்கானா: மதக்கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்களில் 6 பேர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர்.
டெல்லி: இங்கு மொத்தம் 87 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் அறிகுறிகளுடன் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
மேலும் பல மாநிலங்களில் இருந்து மதக்கூட்டத்தில் பங்கேற்றவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, தப்லீகி ஜமாஅத் அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து அரசிடம் தெரிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தப்லீகி ஜமாஅத் கடந்த மாதம் இறுதியில் மலேசியாவில் நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும், அவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பியபோது அங்கெல்லாம் கொரோனா பரவியதும் தெரியவந்துள்ளது.