டெல்லியில் அடுத்த ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு பயன்பாடுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பல நகரங்களிலும் கடந்த சில ஆண்டுகளாக காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது. அதிலும் தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாட்டால் மக்கள் அனைவரும் திணறி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதனால் நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை சமயத்தில் பட்டாசு வெடிக்க தடை அமலில் உள்ளது. வரும் அக்டோபர் 24ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பட்டாசுகளை விற்க, வெடிக்க, சேமித்து வைக்க 2023 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி வரை தடைவிதித்து மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த உத்தரவில் அவர் தெரிவித்துள்ளதாவது “டெல்லியில் இந்த முறை ஆன்லைன் பட்டாசு விற்பனைக்கும், நேரடி விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 , 2023 ஆம் ஆண்டு வரை இந்த கட்டுப்பாடு அமலில் இருக்கும். தடையை கடுமையாக அமல்படுத்த டெல்லி காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு போல் மாசு அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றும் வகையில் இந்த முறை அனைத்து வகையான பட்டாசுகளின் உற்பத்தி சேமிப்பு விற்பனை மற்றும் பயன்பாடு முற்றிலும் தடை செய்யப்படுகிறது” என்று அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.