டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.
அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா பகுதிகள் போர்க்களமாக மாறின.இதனிடையே கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த தலைமைக்காவலர் ரத்தன் லால் என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார். இவர் ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்தவர்.
மேலும் இந்த வன்முறையில் பொதுமக்களில் நான்கு பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமைக்காவலர் ரத்தன் லால் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த காவலர் ரத்தன் லால் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. சக காவலர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.