அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓபிஎஸிற்கு ஆதரவான கருத்தை சசிகலாவும், தினகரனும் கூறி வருகின்றனர். கடந்த சில நாட்களாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சிலர் தினகரன், சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் அமமுக சார்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தினகரன் மதுரையில் இருந்து தேனி நோக்கி வந்தார்.
அப்போது ஆண்டிபட்டி கனவாய் பகுதியில் ஓபிஎஸ்ஸின் ஆதரவாளரும், தேனி மாவட்ட அதிமுக செயலாளருமான சையதுகான் மற்றும் அதிமுக நிர்வாகிகள் காத்திருந்து தினகரனை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்தனர். இது குறித்து கேட்ட போது, சையதுகான் ஒபிஎஸ்ஸின் உத்தரவின் பேரில் இந்த சந்திப்பினை நிகழ்த்தியதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த சந்திப்பு அரசியலில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.