2022-23 நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதித்துறை செயலாளர் முருகானந்தம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு அதிக முக்கியத்துவம்வ வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூபாய் 7,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவிகளின் உயர்கல்வியை ஊக்குவிக்கவே ஒவ்வொரு மாதமும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்பட இருக்கிறது. இதற்கிடையில் நிதி நெருக்கடி நேரத்திலும் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்பட்டு உள்ளது.
இதனால் வருவாய் பற்றாக்குறையை மேலும் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் வரிவருவாய் 17 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் என்று கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதி ஆண்டில் கனிம வளம் வாயிலாக ஆயிரம் கோடியும், பெட்ரோல், டீசல் மூலம் ரூ.23 ஆயிரம் கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. டாஸ்மாக் வாயிலாக இந்த வருடம் ரூ.36 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த வருடத்தை விட 7-8 சதவீதம் கூடுதல் வருவாய் கிடைக்கும். வருகிற ஆண்டில் ரூபாய் 4 ஆயிரம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று கணக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.