ஜாமீனில் வெளியே வந்த விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே கீழ்ப்பாடி கிராமத்தில் அண்ணாமலை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வந்துள்ளார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் சொத்து தகராறில் தன்னுடைய மகன் அலெக்ஸாண்டரை கட்டையால் அடித்து கொடூரமான முறையில் கொலை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி காவல்துறையினர் அண்ணாமலையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த அண்ணாமலையிடம் அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் பேசாமல் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த அண்ணாமலை வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து ரிஷிவந்தியம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அண்ணாமலையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.