மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரத்தில் ஜனவரி 14ஆம் தேதி தைத் திருநாள் அன்று உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெறுவது வழக்கம். இதற்கான முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட நிர்வாகமானது தொடங்கியது. இதன் காரணமாக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் ரோட்டில் பந்தக்கால் நடப்பட்டது. இதையடுத்து ஜல்லிக்கட்டில் பங்கேற்க வரும் காளைகள் வரிசையாக நின்று வருவதற்காக சவுக்கு கம்புகளும் நடப்பட்டது.
அதன்பின் வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற இருந்த சூழலில் திடீரென்று சாலையில் நடைபெற்றுக்கொண்டிருந்த பணிகளை நிறுத்த சொல்லி அறிவுறுத்தியுள்ளனர். மேலும் மறு உத்தரவு வரும் வரையிலும் உள் வேலைகளான வீரர்களுக்கு கொரோனா சோதனை செய்யும் இடம், ஜல்லிக்கட்டு காளைகளை கட்டி வைக்கும் இடம் ஆகிய வேலைகளை மட்டும் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாலையில் நட்டு வைத்த சவுக்கு கம்புகளை வெளியே எடுத்து விட்டனர்.
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு நேற்று சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ள நிலையில் இன்று காலை தொடங்கப்பட்ட ஜல்லிக்கட்டுக்கான முன்னேற்பாடு வெளி வேலைகளை திடீரென்று நிறுத்தி இருப்பதால் பொது மக்களிடையே சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிற சூழலில் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையாளர்கள் இன்றி நடத்துவதற்கு சுகாதாரத் துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக புதிய கட்டுப்பாடு அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.