வாகனம் மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், காணை அருகில் வயலாமூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகன் கூலித்தொழிலாளி முத்து (27). முத்துவிற்கு திருமணமாகவில்லை. இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி இரவு பைக்கில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் முத்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது சிந்தாமணி மேம்பாலம் அருகில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் முத்துவின் மோட்டார் வாகனத்தின் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த முத்து சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விபத்து ஏற்படுத்திய வாகன ஓட்டுநரை வலைவீசி தேடி வருகிறார்கள்.