தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் சொத்துவரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து வருகின்ற ஏப்ரல் 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “தமிழக மக்கள் விலைவாசி உயர்வு, வேலை இழப்பு மற்றும் வருமானம் குறைவு என்று பன்முறை தாக்குதலுக்கு உள்ளாகி அல்லல்படுகின்றனர்.
இந்த நிலையில் திமுக அரசு சொத்துவரியை 150% உயர்த்தி மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. ஓய்வூதியம் பெறுவோர் தனக்கென கட்டிய சின்னஞ்சிறு வீடுகளுக்கு சொத்து வரி கட்ட முடியாமல் அல்லல்படும் நிலையையும், வாடகைக்கு குடி இருப்பவர்கள் மீது வீட்டு உரிமையாளர்கள் சொத்து வரியை சேர்த்து உயர்த்துவதும், மேலும் வணிக நிறுவனங்கள் சொத்து வரி உயர்வை பொருட்களின் மீது வைத்து விலையை உயர்த்துவதும் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு சொத்து வரியை உயர்த்தியிருக்கும் திமுக அரசை கண்டித்து, மக்கள் நலனை கருத்தில் கொண்டு சொத்து வரி உயர்வை உடனே திரும்பப் பெற வலியுறுத்தி அதிமுக சார்பாக ஏப்ரல் 5ஆம் தேதி காலை 10 மணி அளவில் வருவாய் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்” என்று அவர்கள் கூறியுள்ளனர்.