ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்க மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பொதக்குடியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. அந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதக்குடி, அதங்குடி, வெள்ளக்குடி, ஆய்குடி, வாழச்சேரி, கிளியனூர்,மேலவாளச்சேரி அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பெண்கள் பிரசவம் மற்றும் பல்வேறு பரிசோதனைகளுக்காக ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சுகாதார நிலைய கட்டிடத்தின் உள் பகுதியில் மேற்கூரையில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் பிற நோயாளிகள் அச்சத்துடன் வந்து செல்கின்றனர். எனவே சுகாதார நிலையத்தில் சேதமடைந்த பகுதிகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.